போரின் உண்மை முகம்

 ஆஸ்திரியாவின் ஆல்ப்ஸின் தனிமையான ஒரு மலைக்கிராமம் அது. இரண்டாம் உலக போருக்குப் பின்னான சூழல். அப்போது அந்தப் பகுதிக்கு தலைமையேற்க வரும் நேச நாட்டு படைகளைச்சேர்ந்த பிரிட்டிஷ் மேஜரின் ஜீப் ஓட்டுனரை, அந்த மலைப்பாதையில் வைத்து, சரணடைந்த ஆஸ்திரியப் படைப் பிரிவின் அடையாளம் தெரியாத வீரன் ஒருவன், மர்மமான முறையில் சுட்டுக்கொல்கிறான். தப்பித்துப்போன அவனைத் தேடும் ஒரு தேடலில் பரபரப்பாக ஆரம்பிக்கும் கதை. கச்சிதமான Alastair Maclean நாவலின் துவக்கம். அதே மொழியாளுமை.





ஆனால் “The second victory” என்ற இந்தக் கதையின் அடிப்படைக் கரு அதுவல்ல. காரணம் இதை எழுதியது, Morris West. Morris ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் அருகே செயின்ட் கில்டாவில் பிறந்தவர். இளவயதிலேயே தனது தனிப்பட்ட வாழ்வின் சிக்கலில் இருந்து விடுபட ஒரு கத்தோலிக்க திருச்சபையின் அமைப்பில் சேர்ந்தவர். வளர்ந்த பின் அதிலிருந்து அவர் விலகி வந்தாலும், அவருடைய எழுத்தில் விவிலிய மற்றும் கத்தோலிக்க திருச்சபையின் நிழல் எப்போதும் படிந்தே இருந்திருக்கிறது. பரபரப்பாக ஆரம்பிக்கும் அவருடைய நாவல்கள், மனித மனத்தின் அடிப்படைச்சிக்கல்கள், அதனால் ஏற்படும் விளைவுகள் மற்றும் அதன் மீட்சி ஆகியவற்றை அழுத்தமாக முன்வைப்பவை.






ஒரு கொலையின் விசாரணையில் ஆரம்பிக்கும் இந்த நாவல், எடுத்துக்கொண்ட களம் மிக வித்தியாசமானது.
வென்ற படைகளின் கீழ், போரில் தங்கள் மகன்களை, சகோதரர்களை, தந்தையரை இழந்து, தோல்வியுணர்வோடும், யூத அழிப்பின் குற்றவ்வுணர்வோடும் மீட்சியை தேடும் அந்த மக்களின் வெட்கம் நிறைந்த வலி, அவர்களின் மறுசீரமைப்பு மற்றும் அவர்களோடு எஞ்சிய யூதர்களின் மறுவாழ்வு ஆகியவற்றை எதிர்கொள்ளும் இராணுவ அதிகாரிக்கு இருக்கும் மனச்சிக்கல்கள், இதற்கிடையே மறைந்திருக்கும் போர் குற்றவாளிகளின் பயம் என பல அடுக்குகளில் பயணிக்கும் கதை. போரின் பின்னணியில் அறம் சார்ந்த மற்றும் குற்றவுணர்வு சார்ந்த கேள்விகள் எழுப்பும் படைப்பு இது. நான் வாசித்தவரை இப்படி ஒரு வித்தியாசமான சூழலில் வெளிவந்த படைப்பு இது போல் வேறு ஒன்று இல்லை. தார்மீக கேள்விகளை முன்னிறுத்தி வாசிப்பவர்களின் அறவுணர்வை தட்டிப்பார்க்கும் வரிகள்!

"𝑯𝒆 𝒎𝒖𝒔𝒕 𝒑𝒓𝒆𝒔𝒆𝒓𝒗𝒆 𝒉𝒊𝒔 𝒅𝒊𝒈𝒏𝒊𝒕𝒚, 𝒃𝒆𝒄𝒂𝒖𝒔𝒆 𝒅𝒊𝒈𝒏𝒊𝒕𝒚 𝒊𝒔 𝒕𝒉𝒆 𝒍𝒂𝒔𝒕 𝒑𝒐𝒔𝒔𝒆𝒔𝒔𝒊𝒐𝒏 𝒐𝒇 𝒕𝒉𝒆 𝒄𝒐𝒏𝒒𝒖𝒆𝒓𝒆𝒅."


"𝑰𝒏 𝒕𝒉𝒆 𝒐𝒍𝒅 𝒅𝒂𝒚𝒔, 𝒘𝒉𝒆𝒏 𝑰 𝒘𝒂𝒔 𝒂𝒕 𝑮𝒓𝒂𝒛 𝒘𝒊𝒕𝒉 𝒚𝒐𝒖, 𝒕𝒉𝒆𝒚 𝒘𝒆𝒓𝒆𝒏’𝒕 𝒍𝒊𝒌𝒆 𝒕𝒉𝒂𝒕. 𝑻𝒉𝒆𝒚 𝒘𝒆𝒓𝒆 𝒈𝒆𝒏𝒕𝒍𝒆, 𝒈𝒆𝒎𝒖̈𝒕𝒍𝒊𝒄𝒉, 𝒇𝒖𝒍𝒍 𝒐𝒇 𝑺𝒄𝒉𝒎𝒂𝒍𝒛 𝒂𝒔 𝒂 𝒔𝒖𝒆𝒕 𝒑𝒖𝒅𝒅𝒊𝒏𝒈. 𝑾𝒉𝒂𝒕’𝒔 𝒉𝒂𝒑𝒑𝒆𝒏𝒆𝒅?”
“𝑵𝒐𝒕𝒉𝒊𝒏𝒈,” 𝒔𝒂𝒊𝒅 𝑭𝒂𝒕𝒉𝒆𝒓 𝑨𝒍𝒃𝒆𝒓𝒕𝒖𝒔 𝒈𝒓𝒂𝒗𝒆𝒍𝒚. “𝑵𝒐𝒕𝒉𝒊𝒏𝒈 𝒃𝒖𝒕 𝒕𝒉𝒆 𝒇𝒍𝒐𝒘𝒆𝒓𝒊𝒏𝒈 𝒐𝒇 𝒕𝒉𝒆 𝒆𝒗𝒊𝒍 𝒕𝒉𝒂𝒕 𝒘𝒂𝒔 𝒂𝒍𝒓𝒆𝒂𝒅𝒚 𝒊𝒏 𝒐𝒖𝒓 𝒉𝒆𝒂𝒓𝒕𝒔. 𝑵𝒐𝒕𝒉𝒊𝒏𝒈 𝒕𝒉𝒂𝒕 𝒄𝒐𝒖𝒍𝒅 𝒏𝒐𝒕 𝒉𝒂𝒑𝒑𝒆𝒏 𝒕𝒐 𝒚𝒐𝒖 𝒂𝒍𝒔𝒐, 𝒎𝒚 𝒔𝒐𝒏.”

சுமார் பதினெட்டு வருடங்களுக்கு முன், குடும்பத்தை விட்டு ஜெர்மனி வந்த புதிதில் நியூரெம்பெர்க் நகருக்கு வெளியே ஒரு சிறு கிராமத்தில் தங்கி இருந்தேன். இந்தியர்களை அங்கே அதிகம் காணமுடியாத காலகட்டம். புதிதான ஊரும் மக்களும். ஆரம்பத்தில் கண்ணைக்கட்டி கட்டிக் காட்டில் விட்டது போல் இருந்தது. அப்படி ஒரு வார இறுதியில் நகரத்துக்கு செல்ல ரயிலுக்காக அந்த ஊரின் ரயில் நிலையத்தில் தனியாக காத்திருந்தேன். மே மாத ஆரம்பத்தில், வசந்தகால சாரலுக்கே அடர்த்தியான ஜேக்கட் அணிந்துகொண்டு இந்த ஊருக்கு புதுசு என்று சொல்லாமல் சொல்லி நின்று கொண்டிருந்த என்னை நோக்கி, புன்முறுவலுடன் ஒரு மூதாட்டி அருகில் வந்தார்.

"Guten Tag" என்ற அவர் குரலுக்கு தயக்கத்தோடு சிரித்த என்னைப் பார்த்து, மொழி அறியாதவன் என்று புரிந்துகொண்டு, ஆங்கிலத்தில் பேச ஆரம்பித்தார். ரயிலிலும் எங்கள் உரையாடல் தொடர்ந்தது. அதில் அவர் ஜெர்மனியை பூர்வீகமாக கொண்டிருந்தாலும் பிறகு அமெரிக்கா சென்று வாழ்வை அமைத்துக்கொண்டவர் என அறிந்துகொண்டேன். அங்கே பிள்ளைகள் எல்லாம் வளர்ந்து பெரியவர்களான பின், வருடா வருடம் தன் பழம் நினைவுகளுக்காக வந்து சிலகாலம் தங்கிச் செல்கிறார் என்றும் தெரிந்து கொண்டேன். உங்கள் உறவினர்களை சந்தித்து செல்வீர்களா என்று கேட்டதற்கு, மெல்லிய சிரிப்புடன் அப்படி யாரும் மீதம் இல்லை என்று தலையை ஆட்டி மறுத்தார்.

பிறகு எதற்கு என்று குழப்பத்துடன் பார்த்த என்னைப் பார்த்து, மென்சிரிப்போடு, "You see, I am a child of War" என்று சொன்னார். போருக்குப் பின் அவருடைய வாழ்வு மிகக் கடினமாக இருந்தது என்று விளக்கினார். "We used to live on refuses and handouts from the soldiers of the allied forces" என்றார். என் மனது கலங்கியது. அப்போது எனக்கு இருந்த போருக்குப் பின்னான ஜெர்மனியின் நிலை பற்றிய அரைகுறை அறிவினால் போருக்குப் பின்னான ஜெர்மனி மற்றும் ஜெர்மானியரின் நிலை அது எனப் புரிந்து கொண்டேன். அவர் சொன்னவரை அவர் நினைவுகள் என் மனதுக்குள் பெரும் புயலடிக்க வைத்தது.

இறங்க வேண்டிய ரயில் நிலையம் வந்து இறங்கிய பின் அவர் மறுபடியும் சந்திக்கலாமா என்று கேட்டார். ஏனோ மறுத்து விட்டு விடைபெற்று சென்று விட்டேன். அவரிடம் கேட்ட நிகழ்வுகள் அந்த நேரம் மனதில் ஏற்படுத்திய உணர்வதிர்வுகளை தாங்கிக்கொள்ளும் மனப்பக்குவம் எனக்கு அப்போது இல்லை.

இருந்தபோதும் அந்த எதிர்பாராத சந்திப்பும் உரையாடலும் என் நினைவடுக்குகளில் சென்று அமர்ந்துகொண்டது. இந்த சந்திப்பைப் பற்றிய இனம் புரியாத ஒரு நெருடல் மட்டும் அந்த நினைவோடு தொடர்ந்து.
வெகு காலத்திற்குப் பிறகு இப்போது இந்தப் புதினம் வாசித்தபோது அந்த சம்பவம் மீண்டும் நினைவில் வந்து அலையடித்தது. குறிப்பிட்ட பகுதியை வாசித்தபோது, அந்த மூதாட்டி, வதை முகாமில் இருந்து மீட்கப்பட்டவராகவே இருந்திருக்கவேண்டும் என்ற உண்மை முகத்தில் அறைந்தது..
போர் என்றதும், வீர சாகச கற்பனையுடன் - தங்கள் பிள்ளைகளை மட்டும் பத்திரமாக இராணுவத்தில் சேர்க்காமல் - தங்கள் வரவேற்பறையில் அமர்ந்துகொண்டு சர்க்கரை சேர்த்த சூடான காப்பிக் கோப்பையின் கதகதப்பில், தேசபக்தி என்ற பெயரில் மத வெறுப்பை மறைத்து கூச்சலிடும் அன்பர்களின் மனசாட்சியை கேள்வி கேட்கும் புதினம் இது.
“𝑾𝒉𝒆𝒏 𝒂 𝒎𝒂𝒏 𝒄𝒂𝒏 𝒘𝒆𝒆𝒑, 𝒕𝒉𝒆𝒓𝒆 𝒊𝒔 𝒔𝒕𝒊𝒍𝒍 𝒉𝒐𝒑𝒆 𝒇𝒐𝒓 𝒉𝒊𝒎. 𝑮𝒐 𝒉𝒐𝒎𝒆, 𝒎𝒚 𝒔𝒐𝒏, 𝒂𝒏𝒅 𝑰 𝒘𝒊𝒍𝒍 𝒑𝒓𝒂𝒚 𝒇𝒐𝒓 𝒚𝒐𝒖.”

Comments

Popular posts from this blog

பாலை மனம்

Deccan in Dazzling light

சொர்க்கத்தின் பறவைகள் - வாழ்வின் ஓட்டம்