ஒரு கோப்பைத் தேநீர் - பாகம் 1
வீட்டில் அப்பா எப்போதும் டீ மட்டுமே குடிப்பார். இன்று வரை அவருக்கு எந்த சந்தோஷமும் துக்கமும் ஒரு கோப்பை தேநீரில் தீர்ந்து போகும். அம்மாவை மணம் புரிந்த பின் என் பாட்டிக்கு அதிர்ந்து பேசாத, மரியாதையான, குறிப்பாக டீ மட்டுமே குடிக்கும் மாப்பிள்ளை என்பதில் ஏகப்பெருமை. அவர் என்ஜினீயர் என்பதோ, அரசு அதிகாரி என்பதோ அவளுக்கு ஒரு பொருட்டே இல்லை. டீ குடிப்பதைத்தவிர வேறு கெட்ட பழக்கங்கள் ஏதும் இல்லாத மாப்பிள்ளை என்பது அவளுக்கு அவ்வளவு பெருமையாக இருந்தது. கடைசி வரை பிளாஸ்கில் தீரத்தீர காபியை அவளிடம் கேட்டு வாங்கி வைத்து, இரவு பத்து மணிக்குக் கூட குடிக்கும் தாத்தாவின் கணக்கில் அவருடைய காப்பி குடிக்கும் பழக்கமும் ஒரு கெட்ட பழக்கமாகவே அவள் அகராதியில் என்றும் இருந்தது. அத்தோடு இதையெல்லாம் சொல்லிச் சொல்லி என்னை வெறும் பால் மட்டுமே குடிக்க வைத்து வளர்த்தாள். கல்லூரி படிக்கும் காலத்தில் போரடித்தால் கட்டடித்து விட்டு டூ வீலரில் மலையேறி குன்னூருக்கோ ஊட்டிக்கோ சென்று TANTEAயில் டீ குடித்துவருவது தெரிந்திருந்தால் டீ குடிப்பதைப்பற்றிய அவளுடைய அபிப்பிராயம் என்னவாகியிருக்கும் என்று என்னால் நினைத்துக்கூட ப...