நினைவில் மறைந்துபோன தடங்கள்
ஒரு குறிப்பிட்ட சமூகம் அல்லது நிலப்பரப்பைப் பற்றிய அல்புனைவு எழுத்து என்பது அரசியல், கலாச்சார வரலாறு மற்றும் சமகால நிகழ்வுகள், நேரடி கள அனுபவங்கள் எனப் பலதளங்களில் பயணிக்க நேர்கிறது. அதனால் இப்படிப்பட்ட படைப்புகளுக்கு மாறுபட்ட, பன்முகத் திறன் கொண்ட படைப்பாளிகள் தேவைப்படுகிறனர். அதே சமயம், பலநேரங்களில் அப்படிப்பட்ட படைப்பாளிகள் அது தொட்டுச்செல்லும் எல்லா துறைகளிலும் திறன் கொண்டவர்களாக இருப்பதில்லை என்பதும் ஒரு சிக்கல். அப்படி அனைத்திலும் தேர்ந்தவர்களாக இல்லாதவர்கள் கூட சற்று தடுமாறும் ஏதோ ஒரு பரிமாணத்தை தங்கள் சுவாரசியமான கதையாடல்களால் இட்டு நிரப்பி வாசகர்களின் கவனம் சிதறாமல் தக்க வைத்துக்கொள்ளும், கெட்டிக்காரத்தனம் கொண்டவர்களாக இருக்கின்றனர்.
ஆலிஸ் அல்பினியா, அப்படி ஒரு கெட்டிக்காரர். அடிப்படையில் அவர் ஒரு இலக்கிய மாணவர். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியம் பயின்ற அவர், தனது இளங்கலை பட்டத்திற்கு பின் நேரடியாக இந்தியாவில் பத்திரிக்கையாளராக பணிபுரிய ஆரம்பித்தார். பிறகு தென் கிழக்கு ஆசிய வரலாற்றில் பட்டம் பெற்றிருந்தாலும், பத்திரிக்கையாளராகவே தொடர்ந்தார். அதனால் வரலாற்று பயிற்சி இருந்தும், வரலாற்று ஆசிரியராக அவரை எடைபோடுவதை விட, ஒரு பத்திரிக்கையாளராக எடை போடுவதே சரியாக இருக்கும் எனது தோன்றுகிறது. அதே முறையில் அவருடைய "Empires of the Indus: The Story of a River" என்ற இந்தப் படைப்பை ஒரு பத்திரிக்கையாளர் எழுதிய பயணக்கட்டுரைகளின் தொகுப்பாகவே கருதவேண்டும்.
அந்த வகையில் இது மிக சிறப்பான படைப்பு என்றே தோன்றுகிறது. அவருடைய நேரடி பயண அனுபவங்களின் வழியாக பாகிஸ்தானில் உள்ள சிந்து நதியின் கழிமுகத்தில் ஆரம்பித்து, சீனத்தில் உள்ள தோற்றப்புள்ளி வரை செய்த பயணத்தின் மூலம், காலத்தில் முன்னும் பின்னுமாய் சென்று மனிதனின் காலடித்தடங்களை கொண்டு அவர் வடித்திருக்கும் சித்திரம் மிக சுவாரசியமானது. அத்தோடு உலகின் பல பகுதிகளுக்கும் சென்று, பார்த்து, உணரும் வாய்ப்பு கொண்ட இந்தியர்களுக்கு, அப்படி ஒரு வாய்ப்பு இனி எப்போதும் கிட்டாத பகுதியான தற்கால பாகிஸ்தானின் பல்வேறு பகுதிகளையும் மிக அருமையாக அறிமுகம் செய்து வைக்கிறார். இன்றைய பாகிஸ்தானின் பல பகுதிகள் இந்திய சரித்திரத்தில் இடம் பெற்றிருந்த போதும், பிரிவினைக்குப்பின் அவை அனைத்தும், நம் பொது புத்தியில் இருந்து சுத்தமாக மறைந்தே போயின. அப்படி அழிந்து போன தடங்களை திரும்ப கொண்டு வரும் முயற்சிதான் இந்தப் புத்தகம். இந்த புத்தகத்துக்காக "The Society of Authors" வழங்கும் இளம் எழுத்தாளர்களுக்கான "Somerset Maugham Award" என்னும் விருது 2009 ஆண்டு வழங்கப்பட்டது.
இந்த புத்தகத்தில் உள்ள கட்டுரைகள் வழியாக சிந்து நதியின் கரையில் உள்ள பல்வேறு சமூகங்களின் இருப்பு, அவர்களின் தற்கால பிரச்சினைகள் என அனைத்தையும் பூதக்கண்ணாடி கொண்டு நமக்கு காட்டுகிறார் ஆலிஸ். அப்படி வரையப்படும் சித்திரம் பல புதிய புரிதல்களை அளிப்பதோடு, ஏற்கனவே பொதுப் புத்தியில் இருக்கும் பல கருத்துக்களையும் புரட்டிப்போடுகிறது.
சூஃபி மதத்தின் தற்கால திரிந்த நிலை, மற்ற இனக்குழுக்களின் மீதான பஞ்சாபியரின் அடக்குமுறை மற்றும் சுரண்டல், நகரங்களில் இருக்கும் - குறிப்பாக இந்து தாழ்ந்த சாதியினராக கருதப்படும் சமூகத்தினர், கிறிஸ்துவர்கள் மற்றும் ஆப்பிரிக்கர் வழி வந்து, இன்று பொது நீரோட்டத்தில் கலந்து விட்ட சித்திகள் மீதான - சாதிய மற்றும் மத ரீதியான சுரண்டல்கள், மூட நம்பிக்கைகள் என பாகிஸ்தானிய தற்கால சமூகத்தின் மீதான மிகக் கூர்மையான பார்வையை, தனது நேரடியான கள அனுபவங்களின் வழியாக காட்சிப்படுத்துகிறார் ஆலிஸ்.
அவர் சறுக்குமிடம், வரலாறு என்ற ஒற்றைப் புள்ளிதான். பல இடங்களில் அவருடைய வரலாற்றைப் பற்றிய மேலோட்டமான குறிப்புகள் பல்லிளிக்கின்றன. உதாரணமாக காலம்காலமாக பாகிஸ்தானில் தங்கள் அடையாளத்தோடு போராடும் சித்திகள் சமூகத்தைப் பற்றிக் குறிப்பிடும் போது, தென்னிந்திய வரலாற்றில் பாமினி சுல்தான்களில் கறுப்பின அடிமையாக இருந்து அரசாட்சிக்கு வந்த மாலிக் ஆம்பரைப் பற்றி அவரை அக்பரின் எதிரியாக குறிப்பிடுகிறார். உண்மையில் அவர் ஜஹாங்கிர் மற்றும் ஷாஜகானின் காலத்தவர். அதே மூச்சில் திப்பு சுல்தானைப்பற்றிக் குறிப்பிட்டு அவரும் ஒரு ஆப்பிரிக்கர் என அடித்து விடுவது நிறடுகிறது. சமூக வலைத்தளங்களில் பலகாலமாக திப்பு திப் எனப்படும் டான்ஸானிய கொள்ளைக்காரனின் புகைப்படத்தை வைத்து திரிக்கப்பட்ட வதந்திக் கயிறுதான் இது. அதை அடிப்படையாக வைத்து அடித்துவிடுவது ஆலிஸின் சிறப்பான இந்தப் படைப்புக்கு ஒரு கரும்புள்ளிதான். தனது ஒன்று விட்ட சகோதரரும், முன்னணி இந்திய வரலாற்று ஆசிரியருமான, வில்லியம் டால்ரிம்பிளிடம் இதை சொல்லியிருந்தால் கூட அவர் இது போன்ற அடிப்படை தவறுகளை திருத்தியிருப்பாரே!
இதையெல்லாம் தாண்டி, மிக அபாயகரமான பகுதிகள் எனக் கருதப்படும் வஸீரிஸ்த்தான், பலுச்சிஸ்தான் போன்ற பகுதிகளிலும், சீனாவின் உள்ளே சென்று திபெத்திலும் அவர் நிகழ்த்தும் பயணங்கள், மிக சுவாரசியமாக இருப்பதோடு, இதுவரை அறியாத பல நுணுக்கமான உண்மைகளையும் முன்னிறுத்துகிறது.
மொத்தத்தில் இந்த வருடம் இதுவரை வாசித்தவற்றிலேயே இந்த புத்தகத்தை குறிப்பிடத்தக்க ஒன்றாக என்னைக் கருதவைக்கிறது.
Comments
Post a Comment