ஒரு கோப்பைத் தேநீர் - பாகம் 2
தினமும் அதிகாலையில் டீக்கடைகள் பள்ளியெழுச்சி பாடுவது கோவையில் மட்டுமல்ல, தமிழ்நாடு முழுவதும் தான். பசியோடு அதிகாலையிலேயே பணியை துவங்கும் துப்புரவுத்தொழிலாளிகள் முதல் பஸ் பிடித்து எட்டே காலுக்குள் வருகையை பஞ்ச்சடிக்க வேண்டும் என்று ஓடும் ஆலைத் தொழிலாளிவரை, சாமானியர்களின் பசிக்கும் வயிற்றுக்கு அமைதியளிக்கும் அருமருந்து, அந்த பத்து ருபாய் டீ தான். ஆரம்பகாலத்தில் எத்தனையோ முறை ஷாப் பிளோரில் சாப்பாட்டு நேரம் கடந்து பழுதான இயந்திரத்தோடு மல்லுக்கட்டி, சரிசெய்துவிட்டு பசியில் சுருசுருக்கும் வயிற்றோடு கீழே இறங்கிவந்தால், பக்கத்தில் இருந்த ஆப்ரேட்டர், "தம்பி , நீங்க பாட்டுக்கு மும்மறமா வேலைய பாத்துட்டு இருந்திங்க... டீ சப்ளை நேரமாச்சு, அதனால உங்களுக்கும் ஒரு டீ வாங்கிவச்சேன்.. இந்தாங்க" என்று நீட்டும்போது, அப்போது பொங்கி வரும் உணர்வை "ரொம்ப தேங்க்ஸு ங்கண்னா" என்ற இருவார்த்தைகளில் எல்லாம் அணை போட முடியாது. அப்படி எல்லோருக்கும் சஞ்சீவனியாய் திகழும் தேனீரின் பழுப்புப்பக்கங்கள் ரத்தம் தோய்ந்து என்றால் நம்பமுடியுமா? அப்படித்தான் எனக்கும் இருந்தது. சிறு வயதில் குன்னுரில் வளர்ந்த என...